tamilnadu

img

கூடங்குளம் அணு மின் திட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருட முடியாது : அதிகாரி விளக்கம்

நெல்லை,அக்.30- கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான தகவல்கள் இணைய வழியாக ஹேக்கர்களால் திருடப்பட்டு விட்டதாகவும், இதனாலேயே இரு அணு உலைகளும் அடிக்கடி பழுதடைவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரவின. இதற்கு கூடங்குளம் அணுமின் நிலையம் மறுப்பு தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக கூடங்குளம் அணுமின்  நிலைய பயிற்சி கண்காணிப்பாளர் மற்றும் தகவல் அதிகாரி ராம்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கூடங்குளம் அணுமின் நிலையம் மீதான இணைய தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்களில் சில தவறான தகவல் பரவி வருகிறது. கூடங்குளம் அணுமின் திட்டம் மற்றும் இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களின் கட்டுப்பாடுகள் அனைத்தும் மற்றவைகள் போன்று வெளிப்புற இணைய தளத்தில் இணைக்கப்படாமல் தனித்துவம் வாய்ந்தது ஆகும். எனவே அணுமின் நிலைய கட்டுப்பாட்டு அமைப்பில் எந்தவித சைபர் தாக்குதலும் சாத்தியம் இல்லை. அணுமின் திட்டங்கள் குறித்த தகவல்களை ஹேக்கர்கள் திருடி விட முடியாது. அதற்கான வாய்ப்புகள்  கிடையாது. கூடங்குளம் அணுமின் நிலைய தகவல்களை  ஹேக்கர்கள் திருடி விட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலில் உண்மை இல்லை. தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2 அணு உலை களும் இயங்கி வருகின்றன. முதல் அணுஉலையின் மூலம் 1,000 மெகாவாட் மின்உற்பத்தியும், 2-வது அணுஉலையின் மூலம் 600 மெகாவாட் மின்உற்பத்தியும் நடந்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.